ARANGAN OONJAL

ARANGAN OONJAL
Thanks to the Link:   http://namperumal.wordpress.com/category/oonjal/
Posted by sridharan in oonjal 
_______________________
பாசுரங்கள் தொடக்கம்



1. திருவாழத் திருவாழி சங்கம் வாழத்
திருவனந்தன் கருடன் சேனையர் கோன் வாழ
அருள் மாறன் முதலாம் ஆழ்வார்கள் வாழ
அளவு இல் குணத்து எதிராசன் அடியார் வாழ
இருநாலு திருஎழுத்தின் ஏற்றம் வாழ
ஏழ் உலகு நால் மறையும் இனிது வாழ
பெருவாழ்வு தந்தருள் நம்பெருமாள் எங்கள்
பெரிய பெருமாள் அரங்கர் ஆடிர் ஊசல்

2. உயர இட்ட கற்பக பூப்பந்தர் நீழல்
ஒள் பவளம் கால் நிறுவி ஊடு போட்ட
வைர விட்டத்து ஆடகம் சங்கிலிகள் நாற்றி
மரகதத்தால் பலகை தைத்த ஊசன் மீதே
தயிரில் இட்ட மத்து உழக்கும் வெண்ணெய்க்கு ஆடி
தட மறுகில் குடம் ஆடி தழல் வாய் நாகம்
அயர இட்டு அன்று ஆடிய நீர் ஆடிர் ஊசல்
அணியரங்கர் நம்பெருமாள் ஆடிர் ஊசல்

3. மீன் பூத்த விசும்பு அது போல் தரளம் கோத்து
விரித்த நீலப்பட்டு விதானம் தோன்ற
வான் பூத்த கலை மதிபோல் கவிகை ஓங்க
மதிக்கதிர் போல் கவரி இருமருங்கும் வீச
கான் பூத்த தனிச்செல்வன் சிலையுள் மின்னல்
கருமுகில் போல் கனமணி வாசிகையின் நாப்பண்
தேன் பூத்த தாமரையாள் மார்பில் ஆட
தென்னரங்க மணவாளர் ஆடிர் ஊசல்

4. பூசுரரும் புரவலரும் வானநாட்டுப்
புத்தேளிர் குழுவும் அவர் பூவைமாரும்
வாசவனும் மலர் அயனும் மழுவலானும்
வணங்குவான் அவசரம் பார்த்து இணங்குகின்றார்
தூசு உடைய கொடித் தடந்தேர் மானம் தோன்றச்
சுடர் இரண்டும் பகல் விளக்கா தோன்றத் தோன்றும்
தேசுடைய திருவரங்கர் ஆடிர் ஊசல்
ஸ்ரீரங்கநாயகியோடு ஆடிர் ஊசல்.

5. மலைமகளும் அரனும் ஒரு வடம் தொட்டு ஆட்ட
வாசவனும் சசியும் ஒரு வடம் தொட்டு ஆட்ட
கலைமகளும் அயனும் ஒரு வடம் தொட்டு ஆட்ட
கந்தனும் வள்ளியும் கலந்து ஒரு வடம் தொட்டு ஆட்ட
அலைமகரப் பாற்கடலுள் அவதரித்த
மலர் மகளும் நிலமகளும் இரு மருங்கில் ஆட எங்கள்
தண் அரங்க மணவாளர் ஆடிர் ஊசல்.

6. திருவழுதி வளநாடன் பொருநைச் சேர்ப்பன்
ஸ்ரீபராங்குச முனிவன் வகுளச்செல்வன்
தரு வளரும் குருகையர் கோன் காரி மாறன்
சடகோபன் தமிழ் வேதம் ததியர் பாடக்
கருணை மொழி முகமதியம் குறு வேர்வு ஆட
கரிய குழல் கத்தூரி நாமத்து ஆட
அருகிருக்கும் தேவியார்கள் அது கொண்டாட
அணி அரங்கத்து எம்பெருமான் ஆடிர் ஊசல்

7. வையம் ஒரு பொன் தகட்டுத் தகளியாக
வார்கடலே நெய்யாக அதனுள் தேக்கி
வெய்யகதிர் விளக்காக செஞ்சொல் மாலை
மெல் அடிக்கே சூட்டினான் மேன்மைப் பாடத்
துய்ய மதி மண்டலத்தின் மறுவே ஒப்பச்
சோதி விடு கத்தூரி துலங்கு நாமச்
செய்யதிருமுகத்து அரங்கர் ஆடிர் ஊசல்
ஸ்ரீரங்க நாயகியோடு ஆடிர் ஊசல்.

8. அன்பு என்னும் நல் பொருள் ஓர் தகளியாக
ஆர்வமே நெய்யாக அதனுள் தேக்கி
இன்பு உருகு சிந்தை இடு திரியா ஞானத்து
இலகு விளக்கு ஏற்றினான் இசையைப் பாடப்
பொன் புரையும் புகழ் உறையூர் வல்லியாரும்
புதுவை நகர் ஆண்டாளும் புடை சேர்ந்தாட
முன்பிலும் பின்பழகிய நம்பெருமாள் தொல்லை
மூவுலகுக்கும் பெருமாள் ஆடிர் ஊசல்.

9. திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் என்ற
திகழ் அருக்கன் அணி நிறமும் திகிரி சங்கும்
இருள் கொண்ட கருங்கங்குல் இடையே கோவல்
இடை கழியில் கண்ட பிரான் ஏற்றம் பாட
மருக்கொண்ட கொன்றையான் மலரின் மேலோன்
வானவர் கோன் முதலானோர் மகுட கோடி
நெருக்குண்ட தாள் அரங்கர் ஆடிர் ஊசல்
நீளைக்கு மணவாளர் ஆடிர் ஊசல்.

10. நான்முகனை நாரணனே படைத்தான் அந்த
நான்முகனும் நக்கபிரானைப் படைத்தான்
யான் முகமாய் அந்தாதி அறிவித்தேன் என்று
யார்க்கும் வெளியிட்ட பிரான் இயல்பைப் பாடப்
பால் முகம் ஆர் வளை நேமி படைகள் காட்ட
பாசடைகள் திருமேனிப் படிவம் காட்டத்
தேன் முகம் மா முளறி அவயவங்கள் காட்டச்
செழும் தடம் போல் அரங்கேசர் ஆடிர் ஊசல்.

11. மருள் இரிய மறம் இரிய அனைத்து உயிர்க்கும்
மயல் இரிய வினை இரிய மறையின் பாடல்
இருள் இரிய என்று எடுத்துத் தொண்டர் தங்கள்
இடர் இரிய உரைத்த பிரான் இட்டம் பாட
அருள் இரிய அறம் இரிய உலகை ஆண்ட
ஆடகத்தோன் அகம்பரன் என்று அபிமானித்த
பொருள் இரிய சொல் இரிய மார்வம் கீண்ட
பொன்னி சூழ் திருவரங்கர் ஆடிர் ஊசல்.

12. அரன் என்றும் அயன் என்றும் புத்தன் என்றும்
அலற்றுவார் முன் திருநாரணனே ஆதி
பரன் என்று மறை உரைத்துக் கிழி அறுத்த
பட்டர்பிரான் பாடிய பல்லாண்டு பாடக்
கரன் என்ற மாரீசன் கவந்தன் என்ற
கண்டகர் ஆருயிர் மடியக் கண்டு இலங்கா
புரம் வென்ற சிலை அரங்கர் ஆடிர் ஊசல்
புகழ் உறையூர் வல்லியோடு ஆடிர் ஊசல்.

13. மரு மாலைப் பசுந்துவளம் தொடைகளோடு
வைகறையில் வந்து திருத்துயில் உணர்த்தித்
திருமாலை திருவடிக்கே சூட்டி நிற்கும்
திருமண்டங்குடிப் பெருமான் சீர்மை பாடப்
பெருமாலை அடைந்து உலகம் மதிமயங்கப்
பேணாதார் படக் கதிரோன் காணாது ஏக
ஒரு மாலை பகலில் அழைத்து ஒளித்த நேமி
ஒளி உள்ளார் அரங்கேசர் ஆடிர் ஊசல்.
14. கார் அங்கம் திருவுருவம் செய்ய பாத
கமலம் முதல் முடி அளவும் கண்டு போற்றச்
சாரங்கமுனியை ஊர்ந்து அமலனாதி
தனை உரைத்த பாண்பெருமாள் தகைமை பாட
ஆரம் கொள் பாற்கடல் விட்டு அயனூர் ஏறி
அயோத்தி நகர் இழிந்து பொன்னி ஆற்றி சேர்ந்த
சீரங்க மணவாளர் ஆடிர் ஊசல்
சீரங்கநாயகியோடு ஆடிர் ஊசல்.

15. விழி பறித்து வெள்ளியை மாவலியை மண்ணும்
விண்ணுலகும் பறித்த குறள் வேடத்து உம்மை
வழி பறித்து மந்திரம் கொண்டு அன்பர் தங்கள்
வல்வினையைப் பறித்த பிரான் வண்மை பாடச்
சுழி பறித்த கங்கை முடி அடியில் தோயத்
தொழுது இரக்கும் முக்கணன் நான்முகனைச் செய்த
பழி பறித்துப் பலி ஒழித்தார் ஆடிர் ஊசல்
பள்ளி கொண்ட திருவரங்கர் ஆடிர் ஊசல்.

16. போதனார் நெட்டெழுத்தும் நமனார் இட்ட
குற்றெழுத்தும் புனல் எழுத்தாய்ப்போக மாறன்
வேதம் ஆயிரம் தமிழும் எழுதி அந்நாள்
மேன்மை பெறு மதுரகவி வியப்பைப் பாட
ஓதம் ஆர் மீன் வடிவாய் ஆமை ஏனத்து
உருவாகி அரி குறள் மூ இராமர் ஆகிக்
கோதிலாக் கண்ணனாய்க் கற்கியாகும்
கோயில் வாழ் அரங்கேசர் ஆடிர் ஊசல்.

17. ஆர் அமுதின் இன்பமிகு சடகோபன் சொல்
ஆயிரமும் தெரிந்து எடுத்து அடியார்க்கு ஓதி
நாரதனும் மனம் உருக இசைகள் பாடு
நாதமுனிகள் திருநாம நலங்கள் பாடப்
பார் அதனில் பாரதப் போர் முடிய மூட்டிப்
பகை வேந்தர் குலம் தொலையப் பார்த்தன் தெய்வத்
தேர் அதனில் வரும் அரங்கர் ஆடிர் ஊசல்
சீரங்கநாயகியோடு ஆடிர் ஊசல்

18. வம்பு அமரும் சிகை முந்நூல் தரித்த ஞானி
வாதியரை வெல் ஆளவந்தார்க்கு அன்பு
ஆம் எம்பெருமானார்க்கு எட்டும் இரண்டும் பேசி
இதம் உரைத்த பெரியநம்பி இரக்கம் பாடத்
தும்புரு நாரதர் நாத கீதம் பாடத்
தொண்டர் குழாம் இயல் பாடச் சுருதி பாட
நம்பெருமாள் திருவரங்கர் ஆடிர் ஊசல்
நான்முகனார் தாதை ஆடிர் ஊசல்.

19. ஐங்கோலும் ஒரு கோலும் நீர்க் கோலம் போல்
அழிய முனிந்து அறு சமயம் அகற்றி எங்கள்
செங்கோலே உலகு அனைத்தும் செல்ல முக்கோல்
திருக்கையில் கொள் எதிராசன் செயத்தைப் பாடச்
சங்கு ஓலமிடும் பொன்னித் துறையினின்றே
தவழ்ந்து ஏறி மறுகு தொறும் தரளம் ஈனும்
நம் கோயில் நம்பெருமாள் ஆடிர் ஊசல்
நக்கன் மூதாதையர் ஆடிர் ஊசல்.

20. அவத்தம் புல் சமயம் சொல் பொய்யை மெய் என்று
அணி மிடறு புழுத்தான் தன் அவையின் மேவிச்
சிவத்துக்கு மேல் பதக்கு உண்டு என்று தீட்டும்
திருக் கூர வேதியர் கோன் செவ்வி பாடப்
பவம் துக்கம் பிணி நீங்க நரகம் தூரப்
பரமபதம் குடி மலியப் பள்ளி கொள்ளும்
நவம் துப்புச் செங்கனி வாய்க் கரியமேனி
நம்பெருமாள் அரங்கேசர் ஆடிர் ஊசல்.

21. சந்து ஆடும் பொழில் பூதூர் முக்கோல் செல்வன்
தன் மருமகன் ஆகி இரு தாளும் ஆன
கந்தாடைக் குல தீபன் முதலியாண்டான்
கடல் ஞாலம் திருத்தி அருள் கருணை பாடக்
கொந்து ஆரும் துளவு ஆடச் சிறை வண்டு ஆடக்
குழல் ஆட விழி ஆடக் குழைக் காது ஆட
நந்து ஆடக் கதை ஆடத் திகிரி ஆட
நன்மாடத் திருவரங்கர் ஆடிர் ஊசல்.

22. திருக்கலியன் அணுக்கர் திருப்பணி செய் அன்பர்
சீரங்க நான்மறையோர் உள்ளூர்ச் செல்வர்
தருக்கும் இசைப்பிரான்மார் பார் அளந்தார் பாதம்
தாங்குவோர் திருக்கரகம் தரித்து நிற்போர்
இருக்கு முதல் விண்ணப்பம் செய்வோர் வீரர்க்கு
இறையவர்கள் சீபுண்டரீகர் மற்றும்
பெருக்கமுள்ள பரிகரங்கள் தொழுது ஆட்செய்யப்
பிரமமாம் திருவரங்கர் ஆடிர் ஊசல்.

23. உடு திரளோ வானவர்கள் சொரிந்த பூவோ
உதித்து எழுந்த கலைமதியோ உம்பர் மாதர்
எடுத்திடு கர்ப்பூர ஆரத்திதானோ
யாம் தெளியோம் இன்று நீள் திருக்கண் சாத்திப்
படுத்த திருப்பாற்கடலுள் நின்று போந்து
பாமாலை பூமாலை பாடிச் சூடிக்
கொடுத்த திருக்கோதையுடன் ஆடிர் ஊசல்
கோயில் மணவாளர் ஆடிர் ஊசல்.

24. வென்றி வேல் கரு நெடுங்கண் அசோதை முன்னம்
வேர்வு ஆட விளையாடும் வெண்ணெய் ஆட்டும்
குன்று போல் நால் தடந்தோள் வீசி ஆடும்
குரவைதனைப் பிணைந்தாடும் கோள் அறு ஆட்டும்
மன்றின் ஊடு உவந்து ஆடும் மரக்கால் ஆட்டும்
வலி அரவில் பாய்ந்தாடும் வடுவில் ஆட்டும்
அன்று காணா இழந்த அடியோம் காண
அணி அரங்கராசரே ஆடிர் ஊசல்

25. ஆரணங்கள் ஒரு நான்கும் அன்பர் நெஞ்சும்
அணி சிலம்பும் அடி விடாது ஊசல் ஆட
வார் அணங்கு முலை மடவார் கண்ணும் வண்டும்
வள் துளவும் புயம் விடாது ஊசல் ஆடக்
காரணங்கள் ஆய் அண்டர் அண்டம் எல்லாம்
கமலநாபியில் படைத்து காத்து அழிக்கும்
சீர் அணங்கு மணவாளர் ஆடிர் ஊசல்
சீரங்கநாயகனார் ஆடிர் ஊசல்.

26. அடித்தலத்தில் பரி புரமும் சிலம்பும் ஆட
அணி மார்பில் கௌத்துவமும் திருவும் ஆடத்
தொடித்தலத்தில் மணிமடமும் துளவும் ஆடத்
துணை கரத்தில் சக்கரமும் சங்கும் ஆடத்
முடித்தலத்தில் கருங்குழலும் சுறும்பும் ஆடத்
முகமதியில் குறு வேர்வும் குழையும் ஆடக்
கடித்தலத்தில் அரைநாணும் கலையும் ஆடக்
காவேரி சூழ் அரங்கேசர் ஆடிர் ஊசல்.

27. பரந்து அலைக்கும் பாற்கடலுள் பசு சூல் கொண்டல்
படிந்தது எனக் கிடந்தபடி படிமேல் காட்டி
வரம் தழைக்க இரண்டு ஆற்றின் நடுவே தோன்றி
மண்ணுலகை வாழ வைத்த வளத்தைப் பாடத்
புரந்தரற்கும் பெருமாளே ஆடிர் ஊசல்
போதனுக்கும் பெருமாளே ஆடிர் ஊசல்
அரன் தனக்கு பெருமாளே ஆடிர் ஊசல்
அணி அரங்கப் பெருமாளே ஆடிர் ஊசல்.

28. உடு மாயக் கதிர் உதிரச் சண்ட வாயு
உலகு அலைப்ப வடவை சுட உததி ஏழும்
கெடும் ஆறும் திரிதரு கால் உயிர்கள் எல்லாம்
கெடாது வயிற்றுள் இருத்தும் கீர்த்தி பாட
நெடு மாயம் பிறவி எல்லாம் பிறந்து இறந்து
நிலத்தோடும் விசும்போடும் நிரயத்தோடும்
தடுமாறி திரிவேனை அருள் செய்து ஆண்ட
தண் அரங்க நாயகனார் ஆடிர் ஊசல்.

29. முருகன் உறை குறிஞ்சித் தேன் முல்லை பாய
முல்லை நிலத் தயிர் பால் நெய் மருதத்தோட
மருத நிலக் கொழும்பாகு நெய்தல் தேங்க
வரு புனல் காவிரி சூழ்ந்த வளத்தைப் பாடக்
கருமணியே மரகதமே முத்தே பொன்னே
கண்மணியே ஆருயிரே கனியே தேனே
அருள் புரிவாய் என்றவர் தம் அகத்துள் வைகும்
அணி அரங்க மாளிகையார் ஆடிர் ஊசல்.

30. புண்டரிகத்தவன் தவம் செய்து இறைஞ்சும் கோயில்
புரிசடையோன் புராணம் செய்து ஏத்தும் கோயில்
பண்டு இரவி குலத்து அரசர் பணிந்த கோயில்
பரிந்து இலங்கை கோன் கொணர்ந்து பதித்த கோயில்
மண்டபமும் கோபுரமும் மதிலும் செம்பொன்
மாளிகையும் தண்டலையும் மலிந்த கோயில்
அண்டர் தொழும் திருவரங்கம் பெரியகோயில்
அமர்ந்து உறையும் பெருமானார் ஆடிர் ஊசல்.

31. அரு வரங்கள் தரு பராங்குசனே ஆதி
ஆழ்வார்கள் தம்பிரான் ஆடிர் ஊசல்
இருவர் அங்கம் ஒளிக்கு அகலா இருட்டு அகற்றும்
எதிராசன் தம்பிரான் ஆடிர் ஊசல்
தரு வரங்கள் நீள் பொழில் கூரத்து வேத
ஆசாரியனார் தம்பிரான் ஆடிர் ஊசல்
திருவரங்கத்து அணி அரங்கன் திருமுற்றத்துத்
தெய்வங்கள் தம்பிரான் ஆடிர் ஊசல்.

32. உணராத மதலை இளங்குதலைச் சொல்லை
உளம் உருகித் தந்தை தாய் உவக்குமாபோல்
தணவாமல் கற்பிப்பார் தம் சொல் கேட்டுத்
தத்தை உரைத்தத்தை ஆதரிக்குமா போல்
பணம் வாள் அரா முடிமேல் படி ஏழ் போற்றும்
பட்டர் திருத்தாட்கு அடிமைப்பட்ட காதல்
மணவாளதாசன் தன் புன்சொல் கொண்ட
மதில் அரங்கமணவாளர் ஆடிர் ஊசல்.

நிறைவுப் பாட்டு

போது ஆரும் நான்முகனே முதலாய் உள்ள
புத்தேளிர் தொழுநாதன் புவனிக்கு எல்லாம்
ஆதாரமாம் தெய்வம் ஆன நாதன்
அனைத்து உயிர்க்கு நாதன் அணி அரங்கநாதன்
சீத அரவிந்த மலர்த் திருவின் நாதன்
திரு ஊசல் திருநாமம் ஒரு நால் எட்டும்
வேத ஆசாரிய பட்டர்க்கு அடிமையான
வெண்மணிப் பிள்ளைப்பெருமாள் விளம்பினானே.
------------------------------------------------------------------

ஸ்வாமி பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் அருளிச்செய்த
ஸ்ரீரங்கநாயகர் ஊசல் ஸம்பூர்ணம்

ஊஞ்சல் கண்டருளிய நம்பெருமாள் திருவடிகளே தஞ்சம்

ஸ்வாமி பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் திருவடிகளே தஞ்சம்







Comments

Popular Posts